தென்காசி, டிச. 18: தென்காசி அடுத்த பாட்டபத்து காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜகோபால் (21). தென்காசி அருகே செயல்படும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்துவந்த இவர், கல்விக் கட்டணம் செலுத்து முடியாமல் அவதிப்பட்டாராம். அத்துடன் படிப்பிற்கு மடிக்கணினி வாங்கித்தருமாறு வீட்டில் கேட்டு வந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் ராஜகோபால், விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து குற்றாலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மற்றொரு சம்பவம்: தென்காசி அடுத்த மேலகரம் பாறைகுளம் தெருவைச் சேர்ந்த சாமி மகன் மாரியப்பன் (34). மேலகரத்தில் சலவையகம் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர். சுய உதவிக்குழு உறுப்பினராக இருந்து வந்த மாரியப்பன், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் தனது 4 வயது மூத்த மகனுடன் சம்பவத்தன்று கடையை திறக்கவந்த மாரியப்பன், மகனை வெளியே நிறுத்திவிட்டு கடையின் உள்ளே சென்று ஷட்டரை இறக்கிவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.