சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 15ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி தொடங்கி வைத்தார். இத்திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே நல்ல வரவேற்றை பெற்றது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 26ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த நிலையில் திமுக எம்பி பி.வில்சன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை நேரில் சந்தித்து காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கான அழைப்பிதழை நேற்று வழங்கினார். இதுதொடர்பாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
இந்தியாவுக்கே முன்னோடியாகவும், சர்வதேச அளவிலான தரத்துடனும் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்கிறார். இன்று காலை விழா அழைப்பிதழை பி.வில்சன் எம்பி, பஞ்சாப் முதல்வரிடம் நேரில் வழங்கி தமிழ்நாடு முதல்வரின் சார்பில் வரவேற்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்புமிகு திட்டமான காலை உணவு திட்டம் மூலம் அரசு பள்ளிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் வாயிலாக 17 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் சத்தான உணவுடன் கல்வி கற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 26 அன்று இத்திட்டத்தினை நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கிறது திராவிட மாடல் அரசு! இந்த திட்டம் மூலம் இனி 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பசியின்றி பாடம் கற்கும் நிலையை உருவாக்கியுள்ளது திராவிட மாடல் அரசு. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
