×

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!!

சென்னை: திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனது சினிமா பயணத்தை 1975 ஆம் ஆண்டு தொடங்கிய ரஜினிகாந்த் இன்று வரை படங்களில் நடித்து வருகிறார். ஐந்து தசாப்த சினிமா வாழ்க்கையில் பல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் இன்றும் நீங்காத இடத்தை ரஜினிகாந்த் பிடித்துள்ளார். 74 வயதிலும் உச்சத்தில் இருக்கும் நடிகராக வலம் வருகிறார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கூலி’. நாகார்ஜுனா, சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. பான் இந்தியா படமாக வெளியாகும் ‘கூலி’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை 170 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. ‘கூலி’ திரைப்படம் அவரது 171-வது திரைப்படமாகும். இந்த நிலையில் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அதில்,

கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.நாளை வெளியாகும் அவருடைய கூலி திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற Mass Enterntainer-ஆக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. ‘கூலி’ மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்த் சார், சன் குழுமம், சத்யராஜ் சார், லோகேஷ் கனகராஜ், அமீர்கான் சார், சகோதரர் அனிருத், ஸ்ருதிஹாசன் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், சகோதரர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இப்பொன்விழா ஆண்டில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள கூலி திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள்.

செல்வப்பெருந்தகை வாழ்த்து

திரையுலகின் மாபெரும் நாயகன், சூப்பர் ஸ்டார் . ரஜினிகாந்த் திரை பயணத்தில் அரை நூற்றாண்டை கடந்த இந்த சிறப்பான தருணத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். உங்கள் அர்ப்பணிப்பு, உழைப்பு, ஒழுக்கம், எளிமை அனைவருக்கும் முன்மாதிரி.சமூகப் பணியிலும், திரையுலகச் சேவையிலும் உங்களின் பங்கு மறக்க முடியாதது. இன்னும் பல தசாப்தங்கள் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் வாழ்க. நலமுடன் நீண்ட ஆயுள் பெற்று என்றும் பிரகாசிக்க வாழ்த்துக்கள். இவ்வாறு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags : Rajinikanth ,Chennai ,
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...