சிதம்பரம், டிச. 7: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. சுர புன்னை காடுகளைக் கொண்ட இந்த சுற்றுலா மையத்தில் சுரபுன்னை காடுகளின் நடுவே படகு சவாரி செய்வது ஆனந்தமாக இருக்கும். இதனால் உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்திற்கு வருவார்கள். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி கொரோனா ஊரடங்கு காரணமாக பிச்சாவரம் சுற்றுலா தளம் காலவரையின்றி மூடப்பட்டது. இதற்கிடையே டிசம்பர் மாதத்திற்கான ஊரடங்கு தளர்வுகளை சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. அப்போது சுற்றுலா மையங்களை திறக்கலாம் என அறிவித்தது.