தென்மேற்கு வங்க கடலில் 4 காற்று சுழற்சிகள் 9 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் மிக தீவிரம் அடைந்துள்ளது. வட தமிழக மாவட்டங்களில் அனேக இடங்களிலும், தென் தமிழக உள் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களிலும் நேற்று மழை பெய்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடஙகளில் கனமழை முதல் அதி கனமழையும் பெய்துள்ளது. இது தவிர தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்துள்ளது.

இந்நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தேனி திண்டுக்கல், ஈரோடு கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நாளையும் தொடரும். மேலும், 11ம் தேதி வரை வட தமிழகம் உள்ளிட்ட அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இடியுடன் கூடிய மழையும் பெய்யும் வாய்ப்புள்ளது.

Related Stories: