சின்னசேலம், அக். 17: சின்னசேலம் ரயில்நிலையம் நவீனமயமாகி வருவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சின்னசேலம் நகரின் மையப்பகுதியில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து சேலம், பெங்களூரு, விருத்தாசலம், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ரயில்கள் சென்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் சென்னை போன்ற பெருநகரங்களுக்கும் சென்று வருகிறது. கடந்த காலங்களில் இந்த ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இல்லாததால் ரயிலில் இருந்து இறங்கி வரும் பயணிகள் தண்டவாளத்தை கடந்துதான் சென்றனர். அதைப்போல இரண்டாவது நடைமேடையில் மேற்கூரை இல்லாததால் மழை காலங்களில் நனைந்தவாறே ரயிலுக்கு காத்திருந்து ரயிலில் ஏறி சென்றனர். எனவே சின்னசேலம் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் கட்ட வேண்டும். ரயில் பயணிகள் காத்திருக்கும் நடைமேடைகளில் மேற்கூரை அமைத்து தருவதுடன், தரைதளத்தை நவீனமாக்கி தரவேண்டும் என்றும் பொதுநல ஆர்வலர்கள் உள்ளிட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். முன்னாள் மத்திய அமைச்சர்கள் வேங்கடபதி, வேலு, மூர்த்தி உள்ளிட்டோரிடமும் மனு கொடுத்து வந்தனர்.