மேட்டூர், செப்.17: பண்ணவாடி பரிசல்துறையில் படகு பழுதானதால், படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சேலம் மாவட்டம் பண்ணவாடி, கோட்டையூர், செட்டிப்பட்டி பரிசல் துறைகளிலிருந்து, தர்மபுரி மாவட்டம் நாகமரை, ஒட்டனூர் பரிசல்துறைகளுக்கு காவிரியை கடந்து செல்ல விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது. இரு மாவட்ட மக்களும், வியாபாரம் நிமித்தமாகவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லவும் படகு போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். நேற்று பிற்பகல், பண்ணவாடி பரிசல்துறையில் உள்ள விசைப்படகு பழுதானது. அவசர தேவைக்கு வைத்திருக்கும் படகும் பழுதாகி உள்ளது. இதனால் பிற்பகல் ஒருமணி முதல் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.