எலவனாசூர்கோட்டை பகுதியில் அடிக்கடி மின்வெட்டு

உளுந்தூர்பேட்டை,  மே 14: உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எலவனாசூர்கோட்டை, வீரமங்கலம்,  கீழப்பாளையம், மேலப்பாளையம், எ.புதூர், செம்பியன்மாதேவி, பரமேஸ்வரிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக  அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள், விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு  வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன்,  வியாபாரிகள், வர்த்த நிறுவனங்களை வைத்து உள்ளவர்கள், விவசாயிகள் கடுமையாக  பாதிப்பு அடைந்துள்ளனர். இது குறித்து இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்,  சமூக ஆர்வலர்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய  நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

பல கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரையிலும் மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.  தற்போது கோடை  காலம் என்பதால் மின்சாரம் இல்லாமல் வயதானவர்கள், குழந்தைகள் தூங்க  முடியாமல் கொசுக்கடியில் அவதி அடைந்து வருவதாக கூறுகின்றனர். இதுகுறித்து  மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எலவனாசூர்கோட்டை  மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: