விழுப்புரம், மார்ச் 15: விழுப்புரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று துவங்கியது. மாவட்டம் முழுவதும் 48,842 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். முதல் முறையாக பிற்பகலில் இத்தேர்வு நடந்தது. ஆட்சியர் சுப்ரமணியன் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் கடந்த 1ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் 299 மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் 20,068 மாணவர்கள், 21,003 மாணவிகள் என மொத்தம் 41,071 பேர் 132 தேர்வு மையங்களில் தேர்வு எழுதி வருகின்றனர். இதை தொடர்ந்து கடந்த 6ம் தேதி தமிழகம் முழுவதும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இத்தேர்வை 299 மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த 19,213 மாணவர்கள், 20,009 மாணவிகள் என மொத்தம் 39,222 பேர் எழுதி வருகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 132 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நேற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கின. முதல் முறையாக இத்தேர்வுகள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 4.45 மணி வரை நடந்தது.