காங்கயம், மார்ச் 12:காங்கயத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் வாரச்சந்தைக்கு சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வருகின்றனர். சுற்று வட்டார கிராமத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வருகின்றனர். சந்தைக்கு பெண்களே அதிக அளவில் வந்து செல்கின்றனர். சந்தை வளாகத்தில் கழிப்பறை இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில், அசுத்தமாகவும், துர்நாற்றத்துடன், நோய் பரப்பும் இடமாக மட்டுமே இருக்கிறது. கழிப்பறையை பயன்படுத்தவே அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிராமங்களிலிருந்து, காய்கறிகளை இங்கு சந்தைப்படுத்த வருவோர், அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர். அவசர தேவைக்கும், பஸ் ஸ்டாண்ட் வரை செல்ல வேண்டியுள்ளது. சில நேரங்களில் இப்பிரச்னையால், சந்தை வளாகத்தில் பின்புறம் உள்ள காலியிடம் திறந்த வெளிக் கழிப்பிடமாகவும் மாறிவிடுகிறது.