விழுப்புரம், ஜன. 10: விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகள் முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து துறை பணிகள் முன்னேற்றம் குறித்து விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான பழனிசாமி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது. ஆட்சியர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை ஆகிய பல்வேறு துறைகளின் அலுவலர்களுடன் துறையின் சார்பாக விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வளர்ச்சிப்பணிகள் குறித்தும், 2017-18ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளின் நிலை குறித்தும், முடிவு பெற்ற பணிகள் குறித்தும், முடிக்கப்படாத பணிகள் அதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார்.