கிருஷ்ணகிரி, நவ.8: காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கிருஷ்ணகிரி வழியாக டெல்லி செல்வதாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி சிறந்த ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வை உறுதி செய்ய சரியான உணவை உண்ண வேண்டும் என்ற விழிப்புணர்வை பரப்பும் வகையில் ஆரோக்கிய பாரத பயணம் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி திருவனந்தபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி வழியாக செல்லும் இப்பேரணி, வரும் 27.1.2019ம் தேதியன்று புதுடெல்லி சென்றடைகிறது. மதுரை, ஈரோடு, சேலம், தர்மபுரி வழியாக வரும் 8ம் தேதி மதியம் கிருஷ்ணகிரியை வந்தடையும். மறுநாள் 9ம் தேதி காலை முதல் மாலை வரை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுரங்கம், உழவர் சந்தை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அவதானப்பட்டி ஏரி சிறுவர் பூங்கா ஆகிய இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம், கலைநிகழ்ச்சி, உணவு திருவிழா, மருத்துவ முகாம், பேரணி போன்றவை நடத்துகிறது.