தேனி, செப்.7: தேனி கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனை போலீசார் கண்டும் காணாமல் உள்ளனர். தேனி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம். இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீர்வு பெறுகின்றனர். இக்கூட்டங்களுக்கு ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு டிரைவர்கள் வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளேயே ஆட்டோ ஓட்டுநர்களின் இந்த அத்துமீறலை போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும்; எச்சரிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.