சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 1 பணிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு கடந்த ஏப்ரல் 5ம் தேதியும், தமிழ்நாடு தொழிற்சாலைப்பணிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு ஏப்ரல் 25ம் தேதியும், ஏப்ரல் 26ம் தேதியும் நடைபெறுவதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாகவும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட குரூப் 1 பதவிக்கான முதல்நிலை தேர்வு(69 காலி பணியிடங்கள்) வருகிற ஜனவரி 3ம் தேதியும், தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில், உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர்(12 காலி பணியிடங்கள்) தேர்வு வருகிற ஜனவரி 9ம், 10ம் தேதியும் நடைபெறும்.