டெல்லி : மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய செயலாளராக அஜய்குமார் பல்லா பொறுப்பேற்க உள்ளார். அஜய்குமார் பல்லாவின் நியமனத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 1984ஆம் ஆண்டு அசாம்-மேகாலயா பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அஜய்குமார் பல்லா உள்துறை அமைச்சகத்திற்கு சிறப்பு அதிகாரியாக கடந்த ஜூலை 24ம் தேதி முதல் பணியாற்றி வந்தார். முன்னதாக கடந்த 2 ஆண்டுகளாக உள்துறை செயலராக ராஜீவ் கௌபா பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் உள்துறை செயலாளராக இருந்த ராஜீவ் கவ்பா நேற்று கேபினட் செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டார். இதையடுத்து புதிய உள்துறை செயலாளராக அடுத்த இரண்டு ஆண்டுகள் அஜய்குமார் பல்லா பதவி வகிப்பார். இதைத் தவிர பல்வேறு துறைகளுக்கான செயலாளர்களும் நேற்று மாற்றப்பட்டுள்ளனர். பாதுகாப்புத் துறைச் செயலராக அஜய் குமார், லோக்பால் செயலராக பிரிஜ் குமார் அகர்வால், பாதுகாப்பு உற்பத்தித் துறை செயலராக சுபாஷ் சந்திரா ஆகியோரையும் மத்திய அரசு புதன்கிழமை நியமித்தது. இவர்களின் நியமனத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான நியமனக் குழு ஒப்புதல் அளித்தது.