குஜராத் டியூசன் சென்டரில் தீ விபத்து... 20 மாணவர்கள் உடல் கருகி பலி... மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம்

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் டியூசன் செண்டரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சர்த்தானா என்ற இடத்தில் நிகழ்ந்துள்ள இந்த கோர விபத்தில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 4 மாடிகள் கொண்ட ஒரு வணிக வளாகத்தின் மேல் மாடியில் டியூசன் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று பிற்பகல் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. படி அருகே பரவிய தீ வேகமாக பரவியதால் பல மாணவர்கள் 4-வது மாடியில் இருந்து ஜன்னல்கள் வழியாக கீழே குதித்தனர். இதில் பலரை கீழே இருந்தவர்கள் காப்பாற்றினர்.

சில மாணவர்கள் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தனர். 19 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அனைத்த நிலையில் 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களை முதலமைச்சர் விஜய் ரூபானி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதனிடையே சூரத் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: