விழுப்புரம்: வழக்கில் ஆஜராகாததால்திருவள்ளூர் டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து விழுப்புரம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலையத்துக்குட்பட்ட கல்லிப்பாடி என்ற கிராமத்தில் சாராய விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி மணலூர்பேட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ராஜா தலைமையில் போலீசார் ரெய்டுக்குச் சென்றனர். அப்போது கள்ளச் சாராயம் விற்றுக்கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை பிடித்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஆனால், ஊர் பொதுமக்கள் 30 பேர், வேனை சூழ்ந்து கொண்டு கிருஷ்ணமூர்த்தியை விடுவிக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கடத்தல் கும்பல், போலீசாரை தாக்கிவிட்டு வேனை உடைத்து கிருஷ்ணமூர்த்தியை மீட்டுச் சென்றனர்.
இதுதொடர்பாக 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு விழுப்புரம் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த 2010ம் ஆண்டு முதல் விசாரணை நடந்து வருகின்றன. ெமாத்தம் 19 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். முக்கிய சாட்சியான விசாரணை அதிகாரி அப்போதைய இன்ஸ்பெக்டரும், தற்போது திருவள்ளூர் டிஎஸ்பியாக பணியாற்றிவரும் ராஜாவுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி 20 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஒருமுறை கூட அவர் ஆஜராகவில்லை. இதனிடையே நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருவள்ளூர் டிஎஸ்பி ராஜா நேரில் ஆஜராகவில்லை. இதனைத்தொடர்ந்து ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ஜமுனா உத்தரவிட்டார். மேலும் வழக்கின் அடுத்த விசாரணையை வரும் பிப்ரவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி