அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே திருவிழாவிற்காக கூடியிருந்த மக்கள் மீது ரயில் மோதிய விபத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஜோடா பாதாக் என்ற இடத்தில் தசரா திருவிழா நடந்து வந்த இடத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்த சிலர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தசரா விழாவை காண வந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி தண்டவாளத்தின் அருகே நின்றுள்ளனர். ராமலீலா விழாவின் போது பட்டாசு அதிகளவில் வெடித்துள்ளன. அப்போது எரிந்து கொண்டிருந்த ராவணன் உருவபொம்மை முன்பக்கம் சாய்ந்தது. உருவபொம்மை முன்பக்கமாக சாய்ந்ததால் அலறிய பொதுமக்கள் நகர்ந்து பின்னால் இருந்த தண்டவாளத்திற்கு சென்றுள்ளனர்.