சென்னை: குடிமராமத்து திட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை புனரமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 39,202 ஏரிகள் உள்ளன. இதில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14,098 ஏரிகள் உள்ளன. மீதமுள்ள ஏரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரிகள் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்ததால், அந்த ஏரிகள் தனது கொள்ளளவை இழந்து விட்டது. மேலும், ஏரிகளின் கரைகள் பலவீனமடைந்தும், மதகுகள் சேதமடைந்த நிலையில் இருந்தது. இதை தொடர்ந்து, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை பல்வேறு திட்டத்தின் கீழ் ஏரிகள் புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மூன்றாவது கட்டமாக குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.500 கோடி செலவில் 2,500 ஏரிகள் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறை எந்தெந்த கோட்டங்களை சேர்ந்த செயற்பொறியாளர்கள் எந்தெந்த ஏரிகளை புனரமைக்க திட்ட அறிக்கை தயாரிக்க போகிறோம் என்பதை மாவட்ட கலெக்டருடன் இணைந்து ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.