உலக பாரம்பரிய வாரவிழா : இன்று கட்டணமில்லை என்பதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரத்தில் ஏராளமான புராதனச் சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றில் குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள் உள்ளிட்டவை அடங்கும்.இவற்றை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இங்குள்ள சின்னங்களை இந்திய தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது. பல்லவர் ஆட்சிக் காலத்தில் மாமல்லபுரம் முக்கிய துறைமுகமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சீன அதிபர் ஷி ஜிங்பிங் மாமல்லபுரம் வருகை புரிந்ததை அடுத்து, மாமல்லபுரம் மீதான ஈர்ப்பு மக்களிடம் அதிகரித்தது.

தற்போது அதிகளவில் சுற்றுலா பயணிகள் சென்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நவம்பர் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது.இது இந்தியாவில் உள்ள புராதன நினைவுச் சின்னங்களை பராமரித்து பாதுகாத்து வரும் தொல்லியல் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயிலில் ஒரு வாரத்திற்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழாவை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதனச் சின்னங்களை இன்று ஒருநாள் மட்டும் இலவசமாக கண்டு களிக்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் மாமல்லபுரத்தில் புராதான சின்னங்களை பார்க்க சுற்றுலா பயணிகள் அலைமோதினர்.   பாரம்பரிய வாரவிழாவையொட்டி தொல்லியல் துறை சார்பில் மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு தமிழக தொல்லியல் சின்னங்கள் என்ற தலைப்பிலான புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

Related Stories: