மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!

ஊட்டி:  கோடை சீசனுக்காக மரவியல் பூங்கா தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கு பூத்துள்ள புரோவேலியா அமெரிக்கானா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் அனைத்து பூங்காக்களையும் பொலிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மான்பூங்கா செல்லும் சாலையில் உள்ள மரவியல் பூங்கா பொலிவுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பூங்கா குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு இல்லாத நிலையில், பெரும்பாலானவர்கள் இங்கு செல்வதில்லை. எனவே, இதனை பிரபலப்படுத்தும் நோக்கில் கடந்த காலங்களில் இங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. எனினும், சுற்றுலா பயணிகள் அதிகளவு செல்வதில்லை. இந்நிலையில், இப்பூங்கா குறித்து மக்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் தற்போது தாவரவியல் பூங்காவில் டிஜிட்டல் போர்டுகளில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.  அதேசமயம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவை மேம்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.

பூங்கா முழுவதும் பல்வேறு இடங்களில் வண்ண மலர் செடிகளால் பல்வேறு அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பூங்காவை காண குறைந்தளவே சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இப்பூங்காவை கோடை சீசனுக்காக தயார் செய்யும் பணிகள் நடக்கிறது. இதற்காக, பூங்கா முழுவதிலும் தற்போது நாற்று நடவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது பூங்காவில் புரோவேலியாக அமெரிக்கானா என்ற மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. மலர்களே இல்லாத நிலையில், இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த மலர்களை கண்டு ரசிப்பதுடன், அதனை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Related Stories: