வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் 2வது நாளாக குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்

 

பெரியகுளம், ஆக.14: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து நேற்று 2வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது.

இதன் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் நேற்று முன்தினம் தடை விதித்தனர்.

இந்நிலையில், நேற்றும் அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்ததால் பயணிகள் குளிப்பதற்கு 2வது நாளாக தடை விதிக்கப்பட்டது. அருவியில் தண்ணீர் வரத்து சீராகும் வரை பயணிகள் குளிப்பதற்கு தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் நேற்று அருவிக்கு குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

The post வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் 2வது நாளாக குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர் appeared first on Dinakaran.

Related Stories: