வட்டார கல்வி அலுவலர் தேர்விற்கு கணிப்பொறி அறிவியல் பட்டத்தை சேர்க்க வேண்டும்: தேர்வர்கள் கோரிக்கை

 

பழநி, ஜூன் 12: வட்டார கல்வி அலுவலர் தேர்விற்கு கணிப்பொறி அறிவியல் பட்டத்தையும் சேர்க்க வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் வட்டார கல்வி அலுவலர் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான காலியிடங்கள் 33 ஆகும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 7 ஆகும். இதற்கான தேர்வு செப்டம்பர் 9ம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பொது பிரிவினர் 40 வயது வரையிலும் பிசி, பிசிஎம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் 45 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

ஆனால், கல்வி தகுதியில் மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், புவியியல், வரலாறு பாடங்களில் பி.எட் படிப்பில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே தேர்வை எழுத முடியும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் கணிப்பொறி அறிவியல் பாடம் சேர்க்கப்படவில்லை. ஏராளமான இளைஞர்கள் கணிப்பொறி பாடத்தில் பட்டம் பெற்று பி.எட் படிப்பும் முடித்து வைத்துள்ளனர். இவர்களுக்கு பிஇஓ தேர்வு எழுத வாய்ப்பு வழங்கினால் ஏராளமானோருக்கு வாய்ப்பு கிட்டும். எனவே, கல்வித்துறை பரிசீலித்து கணிப்பொறி அறிவியல் படித்த பட்டதாரிகளுக்கும் பிஇஓ தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வட்டார கல்வி அலுவலர் தேர்விற்கு கணிப்பொறி அறிவியல் பட்டத்தை சேர்க்க வேண்டும்: தேர்வர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: