திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே பட்டமங்கலத்தில் ஸ்ரீ அழகு சௌந்தரி அம்மன் கோயிலில் உள்ளது. இங்கு கடந்த மார்ச் 19ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. மார்ச் 20ம் தேதி ஸ்ரீமதியாத கண்ட விநாயகர், ஸ்ரீ அழகுசௌந்தரி அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டு விழா துவங்கியது. 2ம் நாள் முதல் 6ம் நாள் வரை தினமும் சுவாமி காலையில் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. 7ம் நாளான மார்ச் 26ம் தேதி பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து வழிபட்டனர். 8ம் நாள் காலையில் கேடயத்திலும், இரவில் குதிரை வாகனத்திலும் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெற்றது.
9ம் திருநாளான நேற்று காலை ஸ்ரீஅழகு சௌந்தரி அம்மன் பெரிய தேரிலும், மதியாத கண்ட விநாயகர் சிறிய தேரிலும் எழுந்தளினர். பின்னர் அம்மனுக்கும், விநாயகருக்கும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து மாலை 5.40 மணியளவில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு காமதேனு வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது.
10 நாளான இன்று காலை 10 மணியளவில் தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெறும். இரவு சுவாமி பூப்பல்லாக்கில் புறப்பாடு நடைபெறும். நாளை 11ம் நாளன்று காலையில் சுவாமி ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். 10.30 மணியளவில் காப்பு களைதல் நிகழ்ச்சி நடைபெறும்.