பெரியநாயகி அம்மன் கோயிலில் தீ விபத்து உற்சவர் சிலைகள் சேதம் சேத்துப்பட்டு தேவிகாபுரத்தில்

சேத்துப்பட்டு, ஆக. 24: சேத்துப்பட்டு தேவிகாபுரத்தில் பெரியநாயகி அம்மன்கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உற்சவர் சிலைகள் சேதமடைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் பெரியநாயகியம்மன் கோயில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. இதனால் மீண்டும் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு ₹1.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது கோயிலை புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கோயிலின் நடையை சாற்றிகொண்டு குருக்கள் சென்றனர். நேற்று காலை குருக்கள் கோயிலை திறந்தனர். அப்போது கோயிலில் உள்ளே புகை மூட்டமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கோயிலில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். பின்னர் கருவறை மண்டபத்தின் கதவுகள் தீயில் கருகியது. மேலும் உற்சவர் சிலைகள் சேதமடைந்துள்ளது. தீ விபத்தில் ஐம்பொன் சிலைகள் உருகாமல் தப்பியது. இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி நேரில் வந்து தீ விபத்து ஏற்பட்ட பெரியநாயகியம்மன் கோயிலை பார்வையிட்டார். அப்போது உற்சவர் சிலைகள் சேதம் அடைந்துள்ளதா, என தகுந்த நிபுணர்கள் மூலம் கண்டறியப்படும், நாளை கருகிய சிலைகளை ஆகம விதிப்படி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இச்சம்பவத்தால் தேவிகாபுரம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

The post பெரியநாயகி அம்மன் கோயிலில் தீ விபத்து உற்சவர் சிலைகள் சேதம் சேத்துப்பட்டு தேவிகாபுரத்தில் appeared first on Dinakaran.

Related Stories: