பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு

செங்கம், ஜூலை 30: பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நீப்பத்துறை ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கோயில் கொடிமரத்தில் பட்டாட்சியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்று விழா நடந்தது. தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இன்று சிம்ம வாகனத்திலும், நாளை அனுமந்த வாகனத்திலும், 1ம் தேதி கருட வாகனத்திலும், 2ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறும்.

விழாவையொட்டி வண்ண விளக்குகளால் கோயில் அலங்கரிக்கப்பட்டு தினசரி மேளதாளம், மங்கள வாத்தியம், கரகாட்டம் உள்ளிட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடிப்பெருக்கு விழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து கூடுதல் சிறப்பு பஸ் இயக்கப்படுகின்றன. தற்போது தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளதால் கோயில் நிர்வாகம் சார்பில் திருவண்ணாமலை கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அதில் கிருஷ்ணகிரி கலெக்டரை தொடர்பு கொண்டு கிருஷ்ணகிரி அணையை ஆடிப்பெருக்கு விழாவிற்காக தண்ணீர் திறந்து விடவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கிருஷ்ணகிரி கலெக்டரின் உத்திரவின் பேரில் கிருஷ்ணகிரி அணையில் இருந்து ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி பக்தர்கள் புனித நீராட தண்ணீர் திறந்து விடப்படுவதாக கூறப்படுகிறது.

The post பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: