பச்சிளம் குழந்தை இறந்ததாக புகார் போலீஸ் வழக்குப்பதிவு திருவண்ணாமலையில் தடுப்பூசி போட்டதால்

திருவண்ணாமலை, செப்.28: திருவண்ணாமலையில் தடுப்பூசி போட்டதால் ஒன்றரை மாத குழந்தை இறந்ததாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்தவர் யுவராஜ்(35). வழக்கறிஞர். அவரது மனைவி சுப்ரியா. இவர்களுக்கு கடந்த மாதம் 11ம் தேதி புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில், ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், பிறந்து 45 நாட்கள் ஆன குழந்தை ருத்ரவ்ராவனுக்கு, திருவண்ணாமலை நாவக்கரை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுகாதாரத்துறை செவிலியர் மூலம் கடந்த 25ஆம் தேதி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதன்பிறகு, குழந்தையை அவரது பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அன்று இரவு 10:30 மணி வரை குழந்தை கண் விழிக்காமல் தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அடித்துச் சென்றுள்ளனர். அங்கு, குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், இது தொடர்பாக குழந்தையின் தந்தை யுவராஜ் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார். அதில், குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியதால் குழந்தை இறந்திருக்கலாம் என சந்தேகப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு இது தொடர்பான கூடுதல் தகவல்கள் தெரியவரும் எனக்கு கூறப்படுகிறது.

The post பச்சிளம் குழந்தை இறந்ததாக புகார் போலீஸ் வழக்குப்பதிவு திருவண்ணாமலையில் தடுப்பூசி போட்டதால் appeared first on Dinakaran.

Related Stories: