நீடாமங்கலத்தில் பூட்டிய வீடு, கடையில் திருடிய 2 பேர் கைது

நீடாமங்கலம்: நீடாமங்கலம் நகரில் பூட்டிய வீட்டில் நகை, கடையில் வயர் மற்றும் ரொக்கத்தொகை திருடிய இரண்டு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பெரியார் தெருவில் வசித்து வருபவர் பக்கிரிசாமி மனைவி மல்லிகா (60) இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது மகன் வீட்டில் மருமகள் பேரக்குழந்தையுடன் தங்கியுள்ளார். மறுநாள் அதிகாலையில் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு மற்றும் வீட்டிலிருந்த பூரோவும் உடைக்கப்பட்டு அதில் உள்ள துணிகள் சிதறிக்கிடந்தது. வீட்டிலிருந்த 1.5 பவுன் செயின், அரை பவுன் தாலி குண்டு, புதிய சின்ன சைக்கிள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது தெரியவந்தது. உடனே அவர் நீடாமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதேபோன்று அருகில் உள்ள மைக் செட் கடையில் வயர் ரோல், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது. திருவாரூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கப்பட்டது. இதுதொடர்பாக நீடாமங்கலம் போலீசார் விசாரனை மேற் கொண்டு மர்ம நபர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் திருவாரூர் கங்களாஞ்சேரி புத்தூர் தோப்புத்தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (26), திருவாரூர் காலனித்தெருவைச் சேர்ந்த வீரையன் (20) ஆகிய இருவரையும் நீடாமங்கலம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

The post நீடாமங்கலத்தில் பூட்டிய வீடு, கடையில் திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: