செங்கோட்டை-கொல்லம் ரயிலில் பெண் ஸ்டேஷன் மாஸ்டரை தாக்கி நகை, பணம் கொள்ளை

செங்கோட்டை : செங்கோட்டை – கொல்லம் பயணிகள் ரயிலில் மாற்றுத்திறனாளி பெண் ஸ்டேஷன் மாஸ்டரை தாக்கி, 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை பறித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாம்புகோவில் சந்தை பகுதி ஸ்டேஷன் மாஸ்டராக எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரேஷ்மி (28) என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர் இரண்டு நாள் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு செல்ல செங்கோட்டை – கொல்லம் ரயிலில் சென்றுள்ளார். ரேஷ்மி பயணிகளுடன் ஒரு பெட்டியில் பயணித்துள்ளார். தென்மலையில் ரயில் நின்ற போது, பின்பகுதியில் இருந்த பெட்டி ஒன்றில் மர்மநபர் ரயிலில் ஏறியுள்ளார். ரயில் தென்மலையை கடந்து சுரங்கப்பாதையை அடைந்ததும் திடீரென அந்த மர்மநபர் கதவை மூடிவிட்டு கத்தியுடன் ரேஷ்மி இருந்த பெட்டியில் குதித்துள்ளார். இதனால் பயந்து போன ரேஷ்மி, மர்மநபரிடமிருந்து தப்பிக்க ஓடியுள்ளார். ரேஷ்மியை பின்தொடர்ந்து ஓடிய வாலிபர், 3 பவுன் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணப்பையை கத்தியை காட்டி மிரட்டி பறித்துள்ளான். ரேஷ்மி அவரை பிடிக்க முயன்ற போது அவரை கீழே தள்ளி விட்டு தாக்கி உள்ளார். இதில் கையில் காயம் ஏற்பட்டதால் மர்மநபரை பிடிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் மர்மநபர் ரயிலில் இருந்து குதித்து தப்பினார். பணப்பையில் ஒரு தாயத்து மற்றும் மூன்று மோதிரங்கள் இருந்தன. ரயில்வே பாதுகாப்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ரேஷ்மி புனலூர் தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ரயிலில் நடந்த இந்த துணிகர திருட்டு குறித்து தென்மலா, இடமான் பகுதிகளில் ரயில்வே போலீசாரும், தென்மலா போலீசாரும் இணைந்து விசாரிக்கின்றனர்….

The post செங்கோட்டை-கொல்லம் ரயிலில் பெண் ஸ்டேஷன் மாஸ்டரை தாக்கி நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: