நாமக்கல்: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவிலான லாரி ஸ்டிரைக் நேற்று தொடங்கியது. இதனால் தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் ஓடவில்லை. பல ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. டீசல் விலையை குறைக்க வேண்டும், 3ம் நபர் விபத்து காப்பீடு பிரீமியம் உயர்வை குறைக்க வேண்டும், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நேற்று (20ம் தேதி) காலை முதல் இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நடத்தும் இந்த போராட்டத்துக்கு தமிழகத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு அளித்துள்ளது. காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதுமாக சுமார் 68 லட்சம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.