கிருஷ்ணகிரி அருகே சுவற்றில் வரையப்பட்ட பெரியார், அம்பேத்கர் ஓவியங்கள் மீது சாணி கரைசல் தெளிப்பு!: விஷமிகளுக்கு போலீசார் வலை..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே  சமூகவிரோதிகள் சிலர் பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சுவர் ஓவியங்கள் அவமரியாதை செய்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே மோட்டூரில் உள்ள அம்பேத்கர் குடியிருப்பில் பெரியார், அம்பேத்கர் படங்கள் சுவர் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் பிறந்தநாளன்று இந்த இடத்தில் வரையப்பட்டுள்ள ஓவியம் புதுப்பிக்கப்பட்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு சுவர் ஓவியத்தை கிராமத்தினர் புதிதாக வண்ணம் தீட்டி புதுப்பித்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு சமூகவிரோதிகள் சிலர் பெரியார், அம்பேத்கர் ஓவியங்கள் மீது சாணி கரைசலை ஊற்றி விஷமசெயலில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து, கிராமமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார் பெரியார், அம்பேத்கர் ஓவியங்களை அவமரியாதை செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அப்பகுதியில் இரு தரப்பினருக்கிடையே நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்துள்ளனர். …

The post கிருஷ்ணகிரி அருகே சுவற்றில் வரையப்பட்ட பெரியார், அம்பேத்கர் ஓவியங்கள் மீது சாணி கரைசல் தெளிப்பு!: விஷமிகளுக்கு போலீசார் வலை..!! appeared first on Dinakaran.

Related Stories: