காளையார்கோவிலில் தைத்திருவிழா தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்

காளையார்கோவில்: காளையார்கோவிலில் நேற்று சொர்ண காளீஸ்வர் ஆலய தைத்தேர் பவனி சிறப்பாக நடைபெற்றது. பாண்டிய நாட்டுத் திருத்தலங்களில் பதிநான்கில் ஒன்றான திருக்கானப்பேர் என்ற காளையார்கோவிலில், சொர்ண காளீஸ்வரர் -சொர்ணவள்ளி அம்மன், சோமேஸ்வரர் – சௌந்தரநாயகி, சுந்தரேஸ்வரர் – மீனாட்சி, ஆகிய மூன்று சிவன், முன்று அம்பாள் கொண்ட உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு வாய்ந்த புண்ணிய தலம் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த ஜன.16ம் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக நேற்று காலை 9.30 மணியளவில் தேரோடும் வீதி வழியாக இரண்டு தேர்கள் இழுக்கப்பட்டன. பெரிய தேரில் சொர்ண காளீஸ்வரர் காட்சியளிக்க அதனை ஆண்களும், சின்னத்தேரில் சொர்ணவள்ளி அம்மன் வீற்றிருக்க அதனை பெண்களும் இழுத்து வந்தனர். மேலும் பக்தர்களின் ஓம் நமச்சிவாயா என்ற கோஷத்துடன் தேர் பவனி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் பாலசரவணன், ஸ்தாணிகர் சிவ ஸ்ரீ காளிஸ்வரர் குருக்கள், இளங்கோ, மேலாளர் சிவகங்கை சமஸ்தானம், நகரத்தார்கள், ஏஎல்ஏஆர் அறக்கட்டளை மற்றும் தி.ராம.தி குடும்பத்தர்கள் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். தேர்பவனியில் திருக்கானப்பேர் அன்பர் குழுவினர் பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் சர்பத் வழங்கினர். ஆன்மீக அன்பர்குழு பேரவையினர் அன்னதானம் ஏற்பாடு செய்திருந்தனர். தேரோட்டத்திற்கு காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையில் எஸ்.ஐக்கள் மற்றும் போலீசார்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

The post காளையார்கோவிலில் தைத்திருவிழா தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: