கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

 

விருதுநகர், ஜன.30: மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் காதொலி கருவி கேட்டு மனு அளித்த நபருக்கு உடனடியாக காதொலி கருவியை கலெக்டர் வழங்கினார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், ரேசன்கார்டு, வேலைவாய்ப்பு, முதியோர், விதவை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு சென்று கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் காதொலி கருவி கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக ரூ.6 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவியை வழங்கினார். மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஒருவருக்கு தையல் இயந்திரம், ஒருவருக்கு கலெக்டர் விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.3 ஆயிரம் வழங்கினார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ ராஜேந்திரன், தனித்துறை ஆட்சியர் அனிதா, நேர்முக உதவியாளர் முத்துக்கழுவன் உள்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: