இலக்கியம்பட்டி ஏரியில் குப்பைகளால் துர்நாற்றம்

தர்மபுரி, செப்.21: இலக்கியம்பட்டி ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 10 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள இலக்கியம்பட்டி ஏரி, சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், ஏரியில் கலக்கும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரி எப்போதும் பாசம் படிந்தே காணப்படும். ஏரியில் கழிவுநீர் கலப்பதால் ஏரிக்கரையை ஒட்டியுள்ள வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில், துர்நாற்றத்துடன் தண்ணீர் வருகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் பொது குழாய் தண்ணீரையும், வாட்டர் கேன் குடிநீரையும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஏரி முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளாக கிடப்பதால் ஏரி துர்நாற்றம் வீசுகிறது. ஏரியில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பிடமனேரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணியிடம் கேட்டபோது, ‘இலக்கியம்பட்டி ஏரிக்கு வாய்க்கால் மூலம் வரும் குப்பைகள், ஏரிக்குள் சேர்ந்து விடுகிறது. இந்த குப்பைகளை தூய்மையே சேவை திட்டத்தின் கீழ், இலக்கியம்பட்டி ஊராட்சி நிர்வாகம் மூலம் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது,’ என்றார்.

The post இலக்கியம்பட்டி ஏரியில் குப்பைகளால் துர்நாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: