ஆடுகள் மேய்த்த தகராறில் விவசாயியை வெட்டியவருக்கு 6 ஆண்டுகள் சிறை

உளுந்தூர்பேட்டை, ஜூலை 1: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பழங்குணம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (60) விவசாயி. இவரது மகள் ராஜேஸ்வரி என்பவர் கடந்த 1997ம் ஆண்டு ஆடுகளை ஓடை அருகே மேய்க்க சென்றுள்ளார். அப்போது ஆடுகள், அருகே உள்ள அயன்குஞ்சரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (64) என்பவரின் நிலத்தில் சென்று நெற்பயிரை மேய்ந்துள்ளது. இதையடுத்து கண்ணன் ஏன் நிலத்தில் ஆடுகளை மேய்கிறீர்கள் என ராஜேஸ்வரியின் தந்தை சிவலிங்கத்திடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கண்ணன் சிவலிங்கத்தை தாக்கி கத்தியால் வெட்டியுள்ளார். அப்போது தடுக்க வந்த, சிவலிங்கத்தின் மனைவி வீரம்மாளையும் (59) தாக்கி உள்ளார்.

இதில் சிவலிங்கம், அவரது மனைவி வீரம்மாள் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து சிவலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து கண்ணனை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை உளுந்தூர்பேட்டை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விவசாயி சிவலிங்கம் தரப்பில் அரசு வழக்கறிஞர் இளமுருகன் ஆஜரானார். இவ்வழக்கு விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆறுமுகம், கொலை முயற்சி வழக்கில் கண்ணனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய். 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post ஆடுகள் மேய்த்த தகராறில் விவசாயியை வெட்டியவருக்கு 6 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Related Stories: