அண்ணாமலையார் கோயிலில் திருவிளக்கு பூஜை * பச்சையம்மன் கோயிலில் பொங்கலிட்டு வழிபாடு * ஏராளமான பக்தர்கள் தரிசனம் ஆடி மூன்றாம் வெள்ளி திருவிழா

திருவண்ணாமலை, ஆக. 3: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. அதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை நாளன்று அம்மன் திருக்கோயில்களில் நடைபெறும் ஆடிவெள்ளி விழா வழிபாடு சிறப்பு மிக்கது. அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள பச்சையம்மன் மன்னார்சாமி கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரத்தில் பச்சையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படி, ஆடி மூன்றாம் வெள்ளி திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, நேற்று இரவு சிம்ம வாகனத்தில் பச்சையம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், ஆடி நான்காம் வெள்ளியன்று அன்ன வாகனத்தில் பச்சையம்மன் பவனி வருகிறார்.

இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு, பராசக்தி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும், திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று மாலை 6 மணியளவில் திருவிளக்கு பூஜை நடந்தது. அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். அப்போது, அலங்கார ரூபத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு, கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். அடி வெள்ளியை முன்னிட்டு, கோயிலில் கூட்டம் அலைமோதியது.

The post அண்ணாமலையார் கோயிலில் திருவிளக்கு பூஜை * பச்சையம்மன் கோயிலில் பொங்கலிட்டு வழிபாடு * ஏராளமான பக்தர்கள் தரிசனம் ஆடி மூன்றாம் வெள்ளி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: