பங்குச்சந்தை முறைகேடுகளை மையமாக வைத்து, கடந்த 2024ம் ஆண்டு திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படம், ‘லக்கி பாஸ்கர்’. தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் வெளியான இப்படத்தை எழுதி இயக்கிய வெங்கி அட்லூரி, தற்போது சூர்யா, மமிதா பைஜு நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என்ற படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படம் வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் வெங்கி அட்லூரி அளித்துள்ள பேட்டியில், ‘நான் இயக்கிய ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் 2வது பாகம் எப்போது உருவாகும் என்று பலர் ஆவலுடன் கேட்டு வந்தனர். அதற்கு முன்பு 2 படங்களுக்கான பணிகளை நான் முடிக்க வேண்டியிருப்பதால், எனக்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் தேவைப்படும். ‘லக்கி பாஸ்கர் 2’ என்பது மிகப்பெரிய பொறுப்பு.
அதை பல்வேறு கோணங்களில் அணுகி உருவாக்க வேண்டியிருக்கிறது. எனவே, 2 வருடங்களுக்கு பிறகு அதற்கான பணிகளை தொடங்குவேன் என்று உறுதி அளிக்கிறேன். இதற்கிடையே, தனுஷ் நடிப்பில் போலீஸ் கதையைஇயக்க திட்டமிட்டுள்ளேன். ‘டிஸ்னி’, ‘ஹோம் அலோன்’ பாணியிலான குழந்தைகளுக்கான ஒரு படத்தையும் இயக்குகிறேன்’ என்றார். ஏற்கனவே தனுஷ் நடித்த ‘வாத்தி’, ‘சார்’ ஆகிய படங்களை வெங்கி அட்லூரி எழுதி இயக்கியிருந்தார். முன்னதாக துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடித்த ‘லக்கி பாஸ்கர்’ என்ற படம் வசூலில் சாதனை படைத்திருந்தது. அதன் 2ம் பாகம் எப்போது உருவானாலும், அதில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று, இதற்கு முன்பு அளித்திருந்த பேட்டியில் மீனாட்சி சவுத்ரி சொல்லியிருந்தார். ஆனால், அவர் நடிப்பாரா என்பதை வெங்கி அட்லூரி உறுதி செய்யவில்லை.
