பத்தனம்திட்டா: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த ஆகஸ்ட் 1 முதல் 3-ஆம் தேதி (இன்று) வரை வரலாறு காணாத வகையில் 300 மில்லி மீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டம் மிகக் கடுமையான மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான மழை பாதிப்பை சந்தித்துள்ளது, வடாச்சேரிக்கரை போன்ற குறிப்பிட்ட இடங்களில் கிட்டத்தட்ட 300 மி.மீ-க்கும் மேல் மழை பதிவாகியுள்ளதுடன், சில இடங்களில் மேகவெடிப்புக்கு நிகரான மழையின் காரணமாக வெறும் இரண்டு மணி நேரத்திற்குள் அதிகனமழை பொழிந்துள்ளது.
இந்தப் பெருமழை காரணமாகப் பெரும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ரான்னி நகரம் மற்றும் மல்லப்பள்ளி போன்ற முக்கியப் பகுதிகள் கடுமையாக நீரில் மூழ்கியுள்ளன. 40 மி.மீ வரை மட்டுமே மழை பெய்ய வேண்டிய இடத்தில், மிக அதிக அளவில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதே போல சபரிமலை காட்டுப் பகுதிகளில் ஒரே நாளில் சுமார் 300 மி.மீ மழை பதிவானது. எனவே, பத்தனம்திட்டாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த 3 நாட்களில் பெய்த உண்மையான மழை அளவு 350 மி.மீ முதல் 450 மி.மீ வரை என்ற மிக தீவிரமான அளவாக பதிவாகி உள்ளது.
இந்திய வானிலை மையத்தின் (IMD) தரவுப்படி, இந்த 3 நாட்களில் ஒட்டுமொத்த கேரளா மாநிலம் முழுவதும் பதிவான சராசரி மழைப்பொழிவு 184.2 மி.மீ ஆகும். இது வழக்கமான அளவை விட (55.4 மி.மீ) 232% கூடுதலான அதீத மழையாகும். பத்தனம்திட்டா மாவட்டம் இதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
