பொன்னேரி: மீஞ்சூரில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு, 700க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையான அடையாள அட்டை வழங்கிடவேண்டும், அரசே நேரடியாக ஊதியம் வழங்கிடவேண்டும், படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மேலும் கோரிக்கைகள் தொடர்பாக முறையிட 2 மாதங்களாகியும் முதலமைச்சரை சந்திக்கவிடாமல் அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டினர். இதனிடையே, வடசென்னை அனல் மின் நிலையம் அருகே தரையில்கூட அமரக்கூடாது என கூறிய காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்பந்த தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் அவர்களாகவே கலைந்து சென்றனர். தொழிலாளர்களின் திடீர் போராட்டம் காரணமாக 100க்கும் மேற்பட்ட ேபாலீசார் வடசென்னை அனல்மின் நிலைய வாயிலில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
