திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனம் வீட்டுமனையை விற்பனை செய்வதற்கு வசதியாக கால்வாய் சாலையை ஆக்கிரமித்து அமைத்திருந்த சிமென்ட் சாலையை அதிகாரிகள் உடைத்து அகற்றினர். திருவள்ளூர் அடுத்த பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து சென்னை மாநகர மக்களுக்காக குடிநீர் அனுப்பி வைக்கும் பேபி கால்வாய் மற்றும் இணைப்பு கால்வாய்கள் உள்ளது. இந்த நிலையில், பேபி கால்வாய் மற்றும் இணைப்பு கால்வாகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என்று நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதற்காக சென்றுள்ளனர்.
அப்போது கால்வாய்க்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து பிரைட் லோட்டஸ் எனப்படும் தனியார் நிறுவனம் வீட்டுமனை விற்பனை செய்வதற்கு வசதியாக புல்லரம்பாக்கம் அருகே கால்வாய்கள் மீது செல்லும் மண் சாலையை ஆக்கிரமிப்பு செய்து சிமென்ட் சாலை அமைத்திருப்பது தெரிந்தது.
இதுபற்றி அதிகாரிகள் விசாரித்தபோது, ‘’பிரைட் லோட்டஸ் வீட்டுமனை பிரிவு விற்பனை நிறுவனம் கால்வாய் சாலையை தங்களது சாலையாக காண்பித்து வீட்டுமனைகளை விற்பனை செய்துவந்துள்ளது’’ தெரியவந்தது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்திருந்ததை சிமென்ட் சாலையை அதிரடியாக அகற்றினர். இதன்காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
