தஞ்சை: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் ராமாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயசுந்தரம். பெயிண்டர். பெயிண்டர் விஜயசுந்தரத்தின் மகன் சிவக்குமார் (39). இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். மத்திய ரிசர்வ் காவல் படையின் 92-வது பட்டாலியனில் பணியாற்றிவந்த சிவக்குமார் ஹந்த்வாராவில் உள்ள மாவட்டக் காவல் படை முகாமில் இரவு நேரத்தில் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்த ராணுவ வீரர் சிவக்குமாரின் உடல் அவரது சொந்த ஊரான மதுக்கூர் ராமாம்பாள்புரத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது வீட்டு வாசலில் அவரது உடலுக்கு முன்னாள் நின்று ஆயுதப்படை காவலர்கள் 3 முறை மரியாதை அணிவகுப்பு (GUARD OF HONOUR) செய்தனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ராணுவ வீரர் சிவக்குமாரின் உடலை உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஊர்வலமாக ராமாம்பாள்புரம் பகுதியில் உள்ள இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை, ஆயுதப்படை காவலர்கள், கிராம பொதுமக்கள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து 24 குண்டுகள் முழங்க (வானத்தை நோக்கி) ராணுவ வீரர் சிவக்குமாரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் ராணுவ வீரர் சிவக்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சிவக்குமாரின் உறவினர்கள், மதுக்கூர் போலீசார், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பணியில் இருந்தபோது மரணமடைந்த ராணுவ வீரர் சிவக்குமாருக்கு பிரியா (35) என்ற மனைவியும், மற்றும் 9 ஆம் வகுப்பு பயிலும் சுடர்வாணன் என்ற மகனும், 6 ஆம் வகுப்பு பயிலும் கலையாழினிசாய் என்ற மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
