சென்னை ஐஐடி இயக்குநரின்பெயரை குறிப்பிடாமல் ‘மாட்டு மூத்திர நிபுணர்’ என்று பிரியங்கா பேசியதால் சர்ச்சை: நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் தேர்வு சீர்திருத்த குழு உறுப்பினர் குறித்த காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் பேச்சு புதிய அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, பொதுத் தேர்வுகள் மோசடி தடுப்பு திருத்த மசோதா குறித்து நேற்று மக்களவையில் காரசார விவாதம் நடந்தது. அப்போது பேசத் தொடங்கிய காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, தேசிய தேர்வு முகமை பிரச்னைக்குப் பிறகு தேர்வு முறையை சீரமைக்க பிரதமர் மோடியால் அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழுவில் 6 துறை சார்ந்த நிபுணர்கள் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், முந்தைய ராதாகிருஷ்ணன் கமிட்டியின் பரிந்துரைகளே இன்னும் அமல்படுத்தப்படாத நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் முன்னாள் உளவுத்துறை தலைவர், தகவல் தொழில்நுட்ப நிறுவன உரிமையாளர் மற்றும் ‘மாட்டு மூத்திர நிபுணர்’ ஒருவரும் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி கடுமையாக விமர்சித்தார். அவர் சென்னை ஐஐடி இயக்குநர் மற்றும் பேராசிரியர் வி.காமகோடியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும், 2025ம் ஆண்டு ஜனவரியில் அரியானா மாநில கர்னாலில் உள்ள தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் 2021ம் ஆண்டு நடத்திய ஆய்வுகள் உட்பட 5 அறிவியல் கட்டுரைகளைச் மேற்கோள் காட்டி பசுவின் சிறுநீரில் கிருமி நாசினி குணங்கள் இருப்பதாகப் பேசியதை சுட்டிக்காட்டியே பிரியங்கா காந்தி பேசினார்.

அவரின் இந்த பேச்சிற்கு மக்களவையில் உடனடியாக பதிலளித்துப் பேசிய பாஜக எம்பி அனுராக் தாகூர், ‘நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானியையும் சென்னை ஐஐடி இயக்குநரையும் இழிவுபடுத்துவது வேதனை அளிக்கிறது. பிரியங்கா காந்தி முந்தைய காங்கிரஸ் அரசின் தோல்விகளை மறைக்க முயல்கிறார். பிரியங்கா காந்தி தனது சகோதரரை விட சிறந்தவர் என நினைத்தேன். ஆனால், இருவருமே ஒரே பாதையில் பயணிக்கின்றனர். மூளை சரியாகச் செயல்பட அவர்கள் மாட்டு மூத்திரத்தைக் குடிக்கலாம்’ என்று காரசாரமாகப் பதிலடி கொடுத்தார். தேர்வு முறையை சீரமைக்க அமைக்கப்பட்ட 6 நபர்கள் கொண்ட சிறப்பு அதிகாரமிக்க உயர்மட்ட குழுவில் இடம்பெற்ற நிபுணர் குறித்த இந்த வார்த்தைப் போர், நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: