சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் ஓயவில்லை, மீண்டும் தொடங்கியுள்ளது எனத் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராகத் திமுக தொடர்ந்து போராடி வருகிறது. நீட் விலக்கு கோரி இயற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. மசோதாவுக்கு ஒப்புதல் கோரி நீதிமன்றம் வரை சென்று போராடியவர் மு.க.ஸ்டாலின் என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “தோழர் நல்லகண்ணுவின் சிலையை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். யாரைக் கொண்டாட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். மக்களுக்கான களப் போராளிகளை கொண்டாடுவதை விட இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுப்பவர்களை சமூகம் அதிகம் கொண்டாடுகிறது.
கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் முத்தமிழறிஞர் கலைஞருக்கு எப்போதும் மதிப்பு உண்டு. கலைஞர் வழியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தனிப் பாசம் கொண்டுள்ளார். தமிழ்நாட்டு உரிமைக்காக பொதுவுடைமை இயக்கத்தோடு கைகோர்த்து திமுக என்றும் போராடும். குதிரைப்பேரம் எங்கே நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்” என்றார்.
