மாணவர்கள் மீது போலீசார் கொடூர தாக்குதல்; அராஜக நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு போராட்டத்தின் போது மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையின் வரம்பு மீறிய செயல்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான 2026ம் ஆண்டு நீட் நுழைவுத் தேர்வில் சுமார் 22 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில், வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஜூன் 21ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இருப்பினும் வினாத்தாள் கசிவு, தொழில்நுட்பக் கோளாறுகள், ஹால் டிக்கெட் பதிவிறக்கச் சிக்கல்கள் மற்றும் மறுதேர்வில் ஏற்பட்ட இயற்பியல் வினாத்தாள் குழப்பங்கள் போன்றவற்றால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், டெல்லியில் கரப்பான்பூச்சி இயக்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தினர்.

அப்போது போராட்டத்தை கலைக்க போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதையடுத்த நாடு தழுவிய எதிர்ப்புகளால் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மாணவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜால்மால்யா பாக்‌ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் விகாஸ் சிங், பவுசியா ஷக்கில் ஆகியோர் ஆஜராகி, ஏகே-47 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது குறித்தும், பீகார் உட்பட நாடு முழுவதும் நடந்த கொடூர சம்பவங்கள் குறித்தும் முறையிட்டனர். இதனை விசாரித்த நீதிபதிகள், ‘அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமை முழுமையாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

தீவிர போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காக காவல்துறையின் வரம்பு மீறிய நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது. ஜனநாயக செயல்முறைக்கு சுயக்கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்கம் தேவை’ என்று கடுமையாக எச்சரித்தனர். அப்போது ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்றத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்ததையடுத்து, வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: