*குழந்தைகளுடன் அவதி
அரூர் : அரூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, கடந்த 1968ம் ஆண்டு 9வது வார்டு கோபாலகிருஷ்ண செட்டியார் தூய்மை பணியாளர் காலனியில், 24 ஓட்டு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இதில் தூய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
வீட்டிற்கான வாடகை அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.இந்த வீடுகள் கட்டி 58 வருடங்களுக்கு மேல் ஆவதால், வீட்டின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது.
மழை காலங்களில் தண்ணீர் ஒழுகுவதால் மேற்கூரையில் தகரம், பேனர், ஒலை ஆகியவற்றை வைத்து மறைத்து அவதிப்பட்டு வருகின்றனர். சேதமடைந்த இந்த வீடுகளை புதுப்பித்துதர தூய்மை பணியாளர்கள் சார்பில், பல முறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும், அதிகாரிகள் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 2016ம் ஆண்டு தூய்மை பணியாளர்களுக்கு வீடுகள் கட்டி தருவது குறித்து, சேலம் குடிசை மாற்று வாரிய உதவி நிர்வாக பொறியாளராக இருந்த ஜெயந்திமாலா ஆய்வு செய்து விடடு சென்று, 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த பணியும் துவக்கப்படவில்லை.
மழைக்காலங்களில் வீடுகளில் தண்ணீர் வடிவதால் குழந்தைகளுடன் அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பேரூராட்சியில் இருந்து அதிகாரிகள் மாறியும், துப்புரவு பணியாளர்களின் குடியிருப்பின் நிலை மட்டும் மாறவே இல்லை. எனவே, சேதமடைந்த வீடுகளை சீரமைக்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
