கோவை, ஜூலை 17: கோவை சுங்கம்-2 அரசு பேருந்து கிளையில் நடத்துநர், செக்கிங் இன்ஸ்பெக்டர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சுங்கம்-2 கிளையில், அரசு பேருந்து நடத்துநர் சரவணன் மற்றும் செக்கிங் இன்ஸ்பெக்டர் பூபதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென ஆத்திரமடைந்த நடத்துநர் கீழே இருந்த கற்கள், கட்டைகளை எடுத்து பூபதியை சராமாரியாக தாக்கினார். இதையடுத்து, பூபதியும் அவரை தாக்கினார்.
இதனை பார்த்த அங்கிருந்த சக ஊழியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். பணிமனையின் நுழைவு வாயில் பகுதியில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி அடித்துக்கொண்டதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதனை தங்களின் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
