அரியலூர், ஜூலை 15: தவெக தேர்தல் வாக்குறுதிகளின் படி விவசாயப் பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யக் கோரி அரியலூர் மாவட்டம் பரணம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகம் முன் விவசாயிகள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், எவ்வித நிபந்தனைகளின்றி பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முடிவில் விவசாயிகள் 496 பேரும், பரணம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலக செயலரிடம் மனு அளித்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, இரும்புலிக்குறிச்சியை சேர்ந்த விவசாயிகள் நீலமேகம், செந்தமிழ்செல்வன், குமிழியம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன், பரணம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், ஆசைத்தம்பி, பிலாக்குறிச்சியை சேர்ந்த நடராஜன், வீராக்கன் கிராமத்தை சேர்ந்த சம்பத், செதலவாடியைச் சேர்ந்த செல்வதுரை, நாகல்குழியை சேர்ந்த கொளஞ்சியப்பா ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
