சிவகாசி, ஜூலை 14: சிவகாசி அருகே மது பாரில் விற்பனையாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருத்தங்கல் அண்ணாமலைநகரை சேர்ந்தவர் பால்பாண்டி(49). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மதுபாரில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். மது அருந்தும் பழக்கம் உள்ள பால்பாண்டி தினமும் வீட்டிற்கு போதையில் வந்துள்ளார். இதனை அவரது மனைவி ப்ரியா கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் பால்பாண்டி வேலைக்கு செல்லும்போது மது குடிக்க வேண்டாம் என்று மனைவி கூறி உள்ளார். அதற்கு பால்பாண்டி சிறிது நேரத்தில் செய்தி வரும் என்று கூறிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
வேலைக்கு சென்ற அவர் பாரில் உள்ள ஒரு அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சகதொழிலாளர்கள் திருத்தங்கல் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பால்பாண்டி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
