சோழவந்தான், ஜூலை 14: சோழவந்தான் அருகே திருவேடகம் சந்தனக்கூடு திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.சோழவந்தான் அருகே திருவேடகத்தில் ஷா ஹூசைன் பர்ஸி ஒலியுல்லா தர்ஹா உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மொஹரம் மாதத்தில் 26ம் நாள், இங்கு உருஸ் எனும் சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதன்படி நேற்று இரவு பழமையான வழக்கப்படி திருவேடகம் சையத் மதர்ஸா வீட்டிலிருந்து சையத் சகூர் சந்தனக்குடத்துடன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தார். மதநல்லிணக்கத்துடன் இந்துக்கள் வரவேற்று, சிறிய பாத்திரத்தில் சர்க்கரை வைத்து வழிபட்டனர்.
பின்னர், தர்ஹாவில் உள்ள புனித மஜாரில் சந்தனம் பூசி, சிறப்பு பாத்தியா ஓதப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் ஜாபர், கவுஸ் பாட்ஷா, சையத் சகூர் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறுசுவை பிரியாணி வழங்கப்பட்டது. சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
