திருமங்கலம், ஜூலை 14: திருமங்கலம் புதிய ரயில்வே மேம்பாலத்தில் சிமெண்ட் லோடு ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேன் டிரைவர் உள்ளிட்ட 2 பேர் காயமடைந்தனர்.திருமங்கலம் அருகேயுள்ள உலகாணி கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (35). வேன் டிரைவர். திருமங்கலத்தில் உள்ள சிமெண்ட் கடையில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை திருமங்கலம் கடையில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு விமான நிலையம் சாலை வழியாக விடத்தக்குளத்திற்கு வேனை ஓட்டி சென்றார். திருமங்கலம் புதிய ரயில்வே பாலத்தில் வேன் மேலே ஏறி திரும்பிய போது எதிரே டூவீலர் வந்தது.
டூவீலரில் வந்தவர் மீது மோதாமல் இருப்பதற்காக வேனை டிரைவர் அலெக்ஸ் திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக வேன் நிலை தடுமாறி தலைகீழாக பாலத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அலெக்ஸ் மற்றும் வேனில் வந்த மற்றொருவரும் படுகாயமடைந்தனர்.வேனில் ஏற்றி வந்த சிமெண்ட் மூடைகள் பாலம் முழுவதும் சிதறி கிடந்தன. இதனால் பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த இரண்டு பேரையும் ஆம்புலன்ஸ்சில் ஏற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்குள்ளான வேனை மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனர்.
